வட மாகாண சுகாதாரத் துறை நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு
வட மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுகாதாரத் துறையில் நீடித்து வந்த நிர்வாகப் பிரச்சினைகளுக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் உடனடி தலையீட்டின் மூலம் சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதாரத் துறையின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயும் விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் இடம்பெற்றது.
வட மாகாணத்திலுள்ள பகுதி வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் நிர்வாக செயற்பாடுகளில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அமைச்சரை நேரில் சந்தித்து தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில், சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.
வைத்தியர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக்களை முழுமையாகக் கேட்டறிந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதனை வலியுறுத்தியதுடன், பொதுமக்களின் அத்தியாவசிய மருத்துவச் சேவைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாத வகையில் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
இதன்போது அமைச்சர், வட மாகாண ஆளுநருடன் நேரடியாகத் தொடர்புகொண்டு சுகாதாரத் துறையினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே கலந்துரையாடலை ஏற்படுத்தி, நிர்வாக ரீதியான சிக்கல்களுக்கு சுமூகமான தீர்வை பெற்றுக்கொடுத்தார்.
மக்களின் உயிர் மற்றும் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடைய சுகாதார சேவைகள் எந்தவொரு நிர்வாக முரண்பாட்டினாலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.
பிரச்சினைகளைத் தாமதப்படுத்தாமல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேரடியாக கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே மக்களை மையப்படுத்திய நிர்வாகத்தின் அடிப்படை அணுகுமுறை எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.




