மட்டக்களப்பு சிறைச்சாலையில் பாதுகாப்பு தீவிரம்
மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் பிரிவினர் சிறைச்சாலைச் சூழலில் தீவிர ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கைதிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்தார்.
இதனிடையே, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன சிறைச்சாலைக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துக் கேட்டறிந்து ஆராய்ந்தார்.
நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையிலேயே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று (07) இவ்வாறு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.
நீர்கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் தற்போது 42 பேர் மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக 980 கைதிகள் சிறையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ள சிறைச்சாலை அத்தியட்சகர் மோகன், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.




