புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் திறன் சான்றிதழ் வழங்க கோரிக்கை!
திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தைச் சேர்ந்த இலங்கைக்கான முறைசாரா குடியேற்றத் தொடர்பு அதிகாரி சோனியா டக்ளஸ் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஏற்பாட்டில் இதற்குரிய சந்திப்பு இடம்பெற்றது.
முறைசாரா புலம்பெயர்வினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் தொழில் கல்வித் தகைமைக்கு ஏற்ற வகையில் இலங்கை அரசாங்கத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என இதன்போது சோனியா டக்ளஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தின் இணைப்பாளர் மெஹமட் சாமீர், சர்வதேச புலம்பெயர்வு தகவல் மையத்தின் ஆலோசகர் சுமித்ரா சதாசிவம், மாவட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். இளங்கீரன் மற்றும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.






