நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு படைத்திரட்டலுக்கு தயாராகும் புட்டின்?
இந்த வார இறுதியில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, உக்ரைன் போருக்காக ஜனாதிபதி விளாடிமிர் புதின் விரைவில் ஒரு பெரிய புதிய படைதிரட்டலுக்கு உத்தரவிடக்கூடும் என்று ரஷ்யர்கள் மத்தியில் அச்சம் அதிகரித்து வருகிறது.
இந்த அச்சம் கிரெம்ளின் மற்றும் இராணுவ ஆள்சேர்ப்பு மையங்களில் உள்ள அதிகாரிகளிடமும் பரவியுள்ளது.
அவர்கள் சமீபத்திய மாதங்களில் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், சொத்துக்களை வெளிநாடுகளுக்கு மாற்றவும் முயன்று வருவதுடன், நண்பர்களையும் உறவினர்களையும் ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு ஊக்குவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும் தனக்கு அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று புதின் மறுத்து வருகிறார்.
ஆனால் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 300,000 வீரர்களை இராணுவத்தில் சேர்க்க ரஷ்யா தயாராகி வருவதாக ஐரோப்பிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே 2022 செப்டம்பரில் நடந்த முந்தைய அணிதிரட்டல், பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி, பல்லாயிரக்கணக்கானோரை ரஷ்யாவிலிருந்து தப்பி ஓடச் செய்தது. ஆகையால், இந்த முறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.




