இஸ்ரேல் பிரதமரை கைது செய்: வாஷிங்டனில் போராட்டம்
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்துள்ள கைது உத்தரவை அமெரிக்க அதிகாரிகள் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, வாஷிங்டன் DC யில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.
கனமழை மற்றும் பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை நோக்கிப் பேரணியாகச் சென்றுள்ளனர்.
அத்துடன், , ஜார்ஜ்டவுனில் உள்ள போர் சீசன்ஸ் (Four Seasons) ஹோட்டலின் வரவேற்பறைக்குள் (lobby) சில போராட்டக்காரர்கள் அதிரடியாகப் புகுந்தனர். அங்குதான் நெதன்யாகு இரவு உணவருந்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், போராட்டக்காரர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் பலவந்தமாக வெளியேற்றினர். இஸ்ரேஷ் பிரதமருக்கு எதிராக போராட்டக்காரர்கள், கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
காசா மீதான இஸ்ரேலின் போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் புரிந்ததாகக் கூறி, நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) 2024-இல் கைது வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.




