ஹவுதி அமைப்புக்கு எதிராக போரிட அமெரிக்காவுக்கு சவுதி அழைப்பு
செங்கடல் பகுதியில் யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு எதிராகப் போரிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ராணுவ உதவியைக் கோரியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வியாழக்கிழமை சவுதி தலைவருடன் டிரம்ப் குறைந்தது இரண்டு முறை தொலைபேசியில் பேசிய போதிலும், ஹவுதிக்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்வதற்கும், இலக்குகளைத் தீர்மானிப்பதற்கும் அமெரிக்கா உதவ முன்வந்துள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு தலைவர்களுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள் குறித்து Reuters எழுப்பிய கேள்விக்கு வெள்ளை மாளிகை நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத மூத்த அமெரிக்க நிர்வாக அதிகாரி ஒருவர், சவுதி அரேபியா மற்றும் யேமன் அரசாங்கத்துடன் வாஷிங்டன் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“செங்கடலில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது போன்ற அமெரிக்காவின் முதன்மை தேசிய பாதுகாப்பு நலன்களைப் பாதுகாப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.
அதே நேரத்தில், பிராந்தியப் பாதுகாப்புச் சவால்களைக் கையாள்வதற்கும் தீர்ப்பதற்கும் எங்களது பிராந்தியக் கூட்டாளிகளுக்குப் அதிகாரம் அளித்து வருகிறோம்” என்று அந்த அதிகாரி கூறினார்.
அதேவேளை, அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (US Central Command) தளபதி அட்மிரல் பிராட் கூப்பர் பேச்சுவார்த்தைகளுக்காக வியாழக்கிழமை சவுதி அரேபியா சென்றடைந்ததாக மூலாதாரங்கள் இரண்டு உறுதிப்படுத்தியுள்ளன.
ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போர் ஏழாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
இந்த மோதலால் உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் அமெரிக்காவின் பெட்ரோல் விலைகள் உயர்ந்துள்ளன. இது வரவிருக்கும் நவம்பர் இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக டிரம்பின் மக்கள் ஆதரவு வீதத்தை வரலாற்றுப் பின்டைவுக்குத் தள்ளியுள்ளது.




