மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்!
யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இன்று திங்கட்கிழமையுடன் 36 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
இந்நிலையில், தங்களை உடனடியாகச் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வலியுறுத்தி யாழ். மாவட்ட செயலகம் முன்பாகவும், பலாலி சந்திக்கு அருகிலும் இன்று காலை கவனவீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவு மக்கள் இராணுவ நடவடிக்கையினால் தங்களின் பூர்வீக மண்ணை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இலங்கையில் கொடூர யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், அகதிகளாகியுள்ள இந்தப் பகுதி மக்களை இன்னமும் அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்காது, மக்களின் வளமான காணிகளை இராணுவத்தினர் தொடர்ந்தும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர்.
இந்நிலையில், மக்களின் பூர்வீகக் காணிகளில் இருந்து இராணுவத்தினரை உடனடியாக வெளியேற்றி, தங்களைச் சொந்த இடங்களில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியே இவ்விரு இடங்களிலும் ஒரே நேரத்தில் மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தினர்.
தங்களின் பூர்வீகக் காணி விடுவிப்பு மற்றும் உடனடி மீள்குடியேற்றம் தொடர்பான நியாயமான கோரிக்கைகள் அடங்கிய விசேட மகஜர் ஒன்று யாழ். மாவட்ட அரச அதிபரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
அத்துடன், இந்தப் பிரச்சினையைத் தேசிய மட்டத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களிடமும் இந்த மகஜரின் பிரதிகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், சமூகச் செயற்பாட்டாளர்கள் எனப் பல்துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மக்களுக்குத் தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.







