கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு
ஏற்றுமதியை முதன்மைப்படுத்திய 2026 ஆம் ஆண்டு தேசிய கனிமக் கொள்கையின் படி, இந்நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்துவது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், இலங்கை கனிம மணல் சங்கம் (SLMSA) மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் இன்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கனிம வளங்களின் ஆராய்ச்சி, அகழ்வு மற்றும் பெறுமதி சேர்ப்பு செயல்முறைகள் குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், உள்நாட்டு கனிம வளங்களை தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும், ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதற்கும் முறையான வகையில் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
உள்நாட்டு உற்பத்தி தொழிற்துறைகளை வலுப்படுத்துவதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, முதலீட்டாளர்களுக்கு சலுகைகளை வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் என்பன குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்த்து, இத்துறை சார்ந்த முதலீட்டாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை உடனடியாகத் தீர்ப்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது உட்பட, அரச நிறுவனங்களுடன் தொடர்புகொள்ளும்போது முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், நிலவிய கொள்கை ரீதியான சிக்கல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், முதலீடுகளை ஈர்ப்பதில் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இடையில் சிறந்த ஒருங்கிணைப்பைப் பேண வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.





