இலங்கைவந்த கையோடு ஜே.வி.பி. செயலரை சந்தித்தார் சீனத் தூதுவர்
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பெலவத்தையில் உள்ள ஜேவிபி தலைமையகத்தில் நடந்த சந்திப்பின்போது, இலங்கை-சீனா இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது, அதிக சீன முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வறுமை ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீட்டை அதிகரிக்க சீன முதலீட்டாளர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், வறுமை ஒழிப்பில் சீனாவின் அனுபவம் சிறிலங்காவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மற்றும் கிராமப்புற வறுமையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட “பிரஜா சக்தி” திட்டம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.




