கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் விகாரை அமைக்க ஏற்பாடா?
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
கன்னியா வெந்நீரூற்றுக்கு அருகில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் இடத்தில், நாளை (22) புத்த விகாரை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன.
இது தொடர்பாகத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனைத் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
“இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு பேசினேன். அந்த இடத்தில் புத்த விகாரை எதுவும் கட்டப்படமாட்டாது என்றும், அங்குள்ள தொல்பொருட்கள் சிதைவடையாமல் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.
எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டின் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய, அந்த இடத்தில் எந்தவொரு மதக் கட்டிடங்களும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யக் கோரி, சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குரிய ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.





