22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை எதிர்க்கவும்: பிரதமரிடம் எதிரணி கோரிக்கை
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.
இதன்போது, “22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தில் ‘மொட்டு’க் கட்சியும் (ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன) பங்கேற்குமா?” என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த ரஞ்சித் மத்தும பண்டார,
“ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் பங்காளிகள் உட்படப் பல தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள். இது ஒரு திறந்த அழைப்பாகும்; இதில் விருப்பமுள்ள எவரும் கலந்துகொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, “பிரதமருக்கு இப்போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா?” எனக் கேட்டதற்கு,
“விருப்பமிருந்தால் பிரதமரும் இதில் கலந்துகொள்ளலாம்; அல்லது நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்கலாம். தேசிய மக்கள் சக்தியில் சிறந்த கல்விப் பின்னணி கொண்டவர்கள் இருக்கிறார்கள்.
எனவே, அவர்கள் அனைவரும் தங்கள் மனசாட்சியின் பிரகாரம் செயற்பட வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுக்கின்றோம்” என்று அவர் மேலும் கூறினார்.




