கட்சி பெயர், சின்னம் முடக்கம்: சட்டப் போராட்டத்தில் இறங்கினார் மம்தா
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் ‘புல்வெளியில் இரட்டை மலர்கள்’ சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலிக்கும்போது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்று மம்தா பாஜர்ஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆவணங்கள் மீது தேர்தல் ஆணையம் அதிக நம்பிக்கை வைத்திருப்பது ஏன் என்றும், அவர்களில் பல சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகரிடம் இன்னும் நிலுவையில் உள்ளன என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா தலைமையிலான தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனுவையும் தாக்கல் செய்துள்ளது.
இதில், 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மேற்கு வங்க சட்டப்பேரவை சபாநாயகர் தாமதம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் ரிதப்ரதா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகரித்ததற்கும் இந்த மனு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜினகர் சட்டப் பேரவை தொகுதிகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 06 ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான அணியும், அரூப் ராய் தலைமையிலான அணியும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் புல்வெளியில் இரட்டை மலர்கள் சின்னத்துக்கு உரிமை கோரின.
இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் இரு அணிகளும் முறையிட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடைத்தேர்தலில் தனித்தனி பெயர் மற்றும் தனித்தனி சின்னங்களுடன் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.
இதன்படி, மம்தா பானர்ஜி தலைமையிலான அணிக்கு “மம்தா ஆல் இந்தியா திரிணமூல் காங்கிரஸ்” என்ற பெயரும், “கால்பந்து வீரர்” சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அரூப் ராய் தலைமையிலான அணிக்கு “டெமாக்ரடிக் திரிணமூல் காங்கிரஸ்” என்ற பெயரும், “அஞ்சல் உறை” சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், பாஜகவை சேர்ந்த முதல்வர் சுவேந்து அதிகாரி 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அவர் நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, நந்திகிராம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. நந்திகிராம் இடைத்தேர்தலில் மம்தா அணியின் சார்பில், சஞ்சிதா பிரதான் தேய் வேட்பாளராக கடந்த ஞாயிறன்று அறிவிக்கப்பட்டார். அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, அக்கட்சியின் வேட்பாளர் மிலன் பிரதான் பழைய கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.




