சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கிறதா அநுர அரசு? எதிரணி கேள்வி
“எதிர்க்கட்சிகளை ஒடுக்கி, ஒற்றைக் கட்சி ஆட்சி முறையின் கீழ் சர்வாதிகாரத்தை நோக்கி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிக்க முயல்கிறதா?” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு மகா சங்கத்தினர், சட்டத்தரணிகள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் எனப் பல தரப்பினரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதால், நீதித்துறையை அரசியல்மயமாக்குவதற்கு அரசாங்கம் தற்போது முயற்சித்து வருகின்றது.
இன்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர், அதாவது ஆகஸ்ட் 18 ஆம் திகதியே ஜே.வி.பியினர் நாடாளுமன்றத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தினர். அன்று நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்கத்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல, இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலமும் ஆகஸ்ட் 18 ஆம் திகதியே நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இது நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலாகும்.
நாட்டில் ஜனநாயகத்தை ஒழித்து, சர்வாதிகாரம் மற்றும் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையைக் கொண்டுவருவதற்கே ஆளுங்கட்சி முயல்கிறது” என ரஞ்சித் மத்தும பண்டார குற்றம் சாட்டினார்.




