ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள் அழிப்பு!
”ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள் மற்றும் 11 விமானப்படை தளங்களை இந்தியப் படைகள் அழித்தன.”
இவ்வாறு இந்திய விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி தெரிவித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7 ஆம் திகதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது.
இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று நினைவு கூரப்பட்டது.
இதன்போதே விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
” ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் எல்லையில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்தோம்.
பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள், 13 போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
இதில் ரேடார் விமானம் ஒன்று 300 கி.மீ தூரத்துக்கும் அப்பால் வந்தபோதே தகர்க்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களை அனைவரும் பார்க்கலாம்.” எனவும் துணை விமானப்படை அதிகாரி குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் கூறியதெல்லாம் தவறான தகவல். இந்திய ராணுவ கட்டமைப்பு ஏதுவும் சேதமடையவில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் எக்ஸ் தளத்தில் தங்களது சுயவிவர படத்தை ஆபரேஷன் சிந்தூர் லோகோவுடன் வெளியிட்டனர்.




