‘போலி திருமணம்’ மூலம் பிரித்தானியாவுக்குள் ஊடுருவல்- 9 பேர் கைது
பிரித்தானியாவில் போலி திருமணச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பெருமளவில் நடைபெற்று வந்த சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான விசாரணை வேட்டையில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றத் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தி , ஆறு ஆண்டுகளாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டு வந்த இந்த மோசடி உளவு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பிரித்தானியா முழுவதும் உள்ள பல வீடுகளில் அதிரடிச் சோதனைகள் (Dawn Raids) நடத்தப்பட்டன.இதன்போதே மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிறகு , அங்குள்ள ஐரோப்பிய ஒன்றிய (EU) குடிமக்கள் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கு அனுமதிக்கும் ‘ EU Settlement Scheme’ திட்டத்தை இந்த குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும், ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பிற நாட்டு மக்களுக்கும் இடையே போலியாகத் திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர்.
இதன் மூலம், பிரித்தானியாவில் தங்குவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ உரிமையும் இல்லாத பெரும்பான்மையான அல்பேனிய (Albanian) குடியேறிகள் அங்கு குடியேற இந்த கும்பல் வழிவகுத்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட உள்துறை அமைச்சின் குடியேற்ற புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த Andrew Radcliffe ,
“இந்த மோசடி கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கியது. இது மிகவும் சிக்கலான ஒரு மோசடியாகும்.
எனவே, இதுகுறித்த ஆதாரங்களையும் உளவுத் தகவல்களையும் திரட்டி விசாரிப்பதற்கு எங்களுக்கு நீண்ட காலம் தேவைப்பட்டது.
இந்த மோசடியில், தங்களது திருமண உறவு உண்மையானது என்று அதிகாரிகளை நம்ப வைப்பதற்காக, போலியாகத் தயாரிக்கப்பட்ட சைப்ரஸ் நாட்டு திருமணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.” – என்றார்.
“நாங்கள் தேடி வரும் நபர்கள், மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்து பிரித்தானியாவில் தங்குவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர் என்று சந்தேகிக்கிறோம்.
விதிகளை ஏமாற்றி வாழலாம் என்று நினைத்த குற்றவாளிகளுக்கு இந்த அதிரடி நடவடிக்கை ஒரு பலத்த அடியாகும்” என்று Andrew Radcliffe மேலும் தெரிவித்தார்.
‘EU செட்டில்மெண்ட் திட்டம்’ என்பது, கடந்த 2020 டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பிரித்தானியாவில் குடியேறிய ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மற்றும் சுவிட்சர்லாந்து குடிமக்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.
ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து அங்கு வாழ்ந்த பிறகு, அவர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்கு (Settled status) விண்ணப்பிக்கலாம். தற்போது மொத்தம் 5.8 மில்லியன் மக்கள் இத்திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர்.





