GSP+ வரிச்சலுகையில் தாக்கம் செலுத்தும் ‘நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்’
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமானது, நாட்டின் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரிச்சலுகை விவகாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி உடனடியாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:
“நாட்டில் ஜனநாயகமும் சுதந்திரமும் நிலவினால் மட்டுமே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடு செய்ய முன்வருவார்கள். நாட்டின் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் தான் அவர்களுக்கு முதலீடு செய்வதற்கான நம்பிக்கை ஏற்படும்.
சட்டத்தின் ஆட்சி உறுதியாக இல்லாவிட்டால், எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு முதலீடுகளைக் கவர்ந்து இழுக்க முடியாது.
அண்மையில் இடம்பெற்ற நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமானது நமது நாட்டிற்குப் பெரும் பாதகமான விளைவை ஏற்படுத்தும். அங்கு படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல்களிலும் நெறிமுறைகளிலும் எதிரொலிக்கக் கூடும்.
இத்தகைய சிறைச்சாலைச் சம்பவங்களுக்கு வெறும் பொறுப்பேற்பதை விடவும், உண்மையான பொறுப்புக் கூறலையே அரசாங்கம் செய்ய வேண்டும்.
ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் இன்னும் 23 மாதங்களே எஞ்சியுள்ளன. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் முறையான, விரைவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் சுட்டிக்காட்டினார்.




