புலிகளுக்கே அஞ்சாத மஹிந்தவின் மகன்தான் நாமல்: அநுர அரசுக்கு அஞ்சுவாரா என்ன?
“சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனுக்கே அஞ்சாத மஹிந்த ராஜபக்சவின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவர் இந்த அநுர அரசாங்கத்திற்கு அஞ்சுவாரா என்ன?” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இந்திக அனுருத்த கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:
“இந்த அரசாங்கம் தவறான இடத்தில் கை வைத்துவிட்டது. சர்வதேச தொடர்புகளைக் கொண்டிருந்த பிரபாகரனையே மஹிந்த ராஜபக்ச பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அதனால்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவேன் எனச் சூளுரைத்து, போரையும் முடித்துக் காட்டினார்.
இப்படிப்பட்டவரின் மகன்தான் நாமல் ராஜபக்ச. அவருக்கு இந்த அநுர அரசாங்கம் ஒரு பொருட்டே இல்லை. நாமலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிட்டுதான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியே இறங்கினார். இதில் இருந்தே நாமலின் பலம் என்னவென்று புரிகிறது.
நாட்டு மக்கள் ராஜபக்சக்களை மீண்டும் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்; ராஜபக்சக்கள் முன்னெடுத்த அரசியலைத் தேடுகின்றனர். நாம் அரசியல் வியாபாரம் செய்யவில்லை; மக்களுக்குத் தேவையான அரசியலையே முன்னெடுத்தோம்.” – என்றார் இந்திக அனுருத்த.




