வவுனியாவில் “முள்ளிவாய்க்கால் கஞ்சி”! நீதிக்காக ஒலித்த குரல்!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, இறுதிப் போரின் வலிகளைச் சுமந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு இன்று வவுனியா நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியைப் வழங்கி நினைவேந்தலை ஆரம்பித்தனர்.
யுத்தத்தின் இறுதி நாள்களில் குண்டு மழைகளுக்கு மத்தியிலும், உணவின்றித் தவித்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்கு இந்தக் கஞ்சி எவ்வாறு ஒரு உயிர் காக்கும் மருந்தாக அமைந்தது என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
“அன்று எமது உறவுகள் ஒருவேளை கஞ்சிக்காக வரிசையில் நின்ற போது கொத்துக் குண்டுகளுக்கு இரையானார்கள்” என்பதை நினைவுபடுத்தியவாறு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று கஞ்சியைப் பெற்றுக்கொண்டனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களைத் தாங்கியவாறு தாய்மார்கள் கஞ்சியைப் பரிமாறிய காட்சி, அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
வவுனியா நகரின் பிரதான பகுதிகளில் இன்றும் நாளையும் இந்த நினைவேந்தல் கஞ்சிப் பகிர்வு தொடரவுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.





