அரச வரலாற்றில் 180 ஆண்டுகால பாரம்பரியத்தை மாற்றிய மன்னர் சார்லஸ்
அடுத்த ஆண்டு பக்கிங்ஹாம் அரண்மனையின் விரிவான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததும், அதைத் தனது நிரந்தர வசிப்பிடமாக ஆக்கிக்கொள்ளப் போவதில்லை என மன்னர் மூன்றாம் சார்லஸ் அறிவித்துள்ளார்.
மன்னரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகளாக பிரித்தானிய முடியாட்சியில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த அரச பாரம்பரியம் நிகழ்வு முடிவுக்கு வந்துள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பதிலாக மன்னர் சார்ல்ஸும் ராணி கமிலாவும் பல ஆண்டுகளாகத் தாங்கள் வசித்து வந்த லண்டன் இல்லமான கிளாரன்ஸ் ஹவுஸிலேயே (Clarence House) தொடர்ந்து வசிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரச குடும்பத்தில் மன்னரின் இந்த முடிவு குறிப்பிடத்தக்க மாற்றத்தை குறிக்கிறது.
பக்கிங்ஹாம் அரண்மனை முடியாட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையகமாகவும், அரச விழாக்களின் மையமாகவும் நீடித்தாலும், அது இனி மன்னரின் பிரதான இல்லமாகச் செயல்படாது.
இந்த மாற்றம் அந்த அரண்மனையை மக்கள் எளிதில் அணுகுவதற்கான சாத்தியத்தை வழங்குவதாக அரண்மனை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நடவடிக்கை பக்கிங்ஹாம் அரண்மனையின் அரசியலமைப்பு முக்கியத்துவத்தைக் குறைக்காது என்றும், மாறாக இது ஒரு பரிணாம வளர்ச்சியாக பார்க்கப்படுவதாகவும் அரச உதவியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் பக்கிங்ஹாம் அரண்மனை முடியாட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையகமாகத் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய மன்னர் சார்லஸ் கிளாரன்ஸ் ஹவுஸில் தொடர்ந்து வசித்தாலும், பக்கிங்ஹாம் அரண்மனையே அதிகாரப்பூர்வ அரசப் பணிகளுக்கான பிரதான இடமாகத் தொடரும். அரச விருந்துகள், தூதரக வரவேற்புகள், முடிசூட்டு விழாக்கள், பிரதமருடனான சந்திப்புகள் மற்றும் வருடாந்திர தோட்ட விருந்துகள் ஆகியவை அரண்மனையில் தொடர்ந்து நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புனரமைப்புப் பணிகள் முடிந்தவுடன், பக்கிங்ஹாம் அரண்மனையை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் சுமார் 700,000 பேர் வருகைத் தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
2017-ல் தொடங்கிய பத்தாண்டு கால புனரமைப்புப் பணியானது, சுமார் அறுபது ஆண்டுகளாகப் பெரும்பாலும் மாற்றமின்றி இருந்த, பழைமையான மின் வயரிங், குழாய் அமைப்புகள், வெப்பமூட்டும் அமைப்புகள் மற்றும் பிற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளை மாற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






