கோல்டர்ஸ் கிரீன் தாக்குதல்: விரைவாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர்
கோல்டர்ஸ் கிரீனில் நேற்று இடம்பெற்ற தாக்குதலுக்கு குற்றவியல் நீதி அமைப்பு விரைவாகவும் வெளிப்படையான முறையிலும் பதிலளிக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
டவுனிங் தெருவில் குற்றவியல் நீதி அமைப்புகளுடன் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் அவர் இதனை வலியுறுத்தினார். அதிர்ச்சியூட்டும் இத்தகைய தாக்குதல்களுக்கு துரிதமான பதில் அளிப்பது அதிகாரிகளின் கடமை என்றும் அவர் கூறினார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நடவடிக்கைகள் வேகமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறும் என்பதை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்துவது அவசியம் என்றும் அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் பெருநகர காவல்துறை ஆணையர் சர் மார்க் ரௌலி, உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மற்றும் துணைப் பிரதமர் டேவிட் லேமி ஆகியோரும் பங்கேற்றனர்.
தாக்குதலை முற்றிலும் அதிர்ச்சியூட்டும் செயல் என கண்டித்த பிரதமர், இது தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், யூத சமூகத்தை குறிவைத்து தொடர்ச்சியாக இடம்பெறும் தாக்குதல்களின் ஒரு பகுதியாக பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அண்மைய வாரங்களில் யூத சமூகத்தினரிடையே பாதுகாப்பு, நிம்மதி மற்றும் அடையாளம் குறித்த ஆழ்ந்த கவலை நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





