நீதித்துறை மறுசீரமைப்பு தொடரும்: அரசு திட்டவட்டம்
நீதித்துறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றும், இந்த விடயத்தில் மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பக்கமே நிற்கின்றார்கள் என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நீதித்துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய மாற்றங்களை முன்னெடுப்பதற்காகவே தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் தங்களின் ஆணையை வழங்கினார்கள்.
அதன் ஒரு அங்கமாகவே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நீதித்துறையின் சுயாதீனத்திற்கு எவ்வாறு அச்சுறுத்தலாக அமையும் என்பது புரியவில்லை.
நீதித்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். இதற்கு மக்கள் நிச்சயமாக எமக்குத் துணையாக நிற்பார்கள்.
22ஆவது திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அது எமக்கு பிரச்சினையாக அமையாது. ஏனெனில், இந்த விவகாரத்தை நாம் மிகவும் வெளிப்படைத்தன்மையுடனேயே கையாண்டு வருகிறோம்” என்றார் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க.




