இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு முட்டுக்கட்டை
ஈரான் போர்ச் சூழலால் வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பலவீனமடைந்து, பணவீக்கம் அதிகரித்து, நிதி அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான Fitch Ratings எச்சரித்துள்ளது.
இவ்வாறான தாக்கமானது பொருளாதார நெருக்கடியில் இருந்து மெதுவாக மீண்டு வரும் இலங்கைக்கு புதிய உலகளாவிய சவால்கள் உருவாகியுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடியின் நேரடித் தாக்கமாக எரிபொருள் விலை உயர்வு, பணவீக்க அதிகரிப்பு, நாணய மதிப்பு வீழ்ச்சி மற்றும் இறுக்கமான பணவியல் கொள்கை ஆகிய சவால்களை இலங்கை ஏற்கனவே எதிர்நோக்கி வருகின்றது.
இந்த நிலையில், வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதாரத் துறைகளுக்கான தனது எதிர்காலக் கணிப்பை “மோசமடைந்து வருகிறது” (Deteriorating) என Fitch நிறுவனம் மாற்றியுள்ளது.
தீவு நாடான இலங்கையைப் பொறுத்தவரை இந்த அபாயங்கள் வெறும் கணிப்பு மட்டுமல்ல, ஏற்கனவே நிஜமாக மாறத் தொடங்கியுள்ளன.
உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் நாணய வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கை மத்திய வங்கி (CBSL) கடந்த மே மாதம் எதிர்பாராத விதமாக தனது கொள்கை வட்டி விகிதத்தை (Overnight Policy Rate) 100 புள்ளிகள் உயர்த்தி 8.75 சதவீதமாக அறிவித்தது.
இது கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வட்டி விகித உயர்வாகும்.
இதன் விளைவாக, இலங்கையின் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாக உயர்ந்ததுடன், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்ததால் இலங்கை ரூபாயின் மதிப்பும் நெருக்கடிக்குள்ளானது.
Fitch நிறுவனத்தின் தற்போதைய மதிப்பீட்டின்படி, இந்த பொருளாதார நெருக்கடிகள் விரைவில் தணிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்த ஆண்டு கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சராசரியாக 62 அமெரிக்க டாலராக இருக்கும் என கணித்திருந்தது.
ஆனால் தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களால் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent crude) விலை சில நேரங்களில் 100 டாலரையும் தாண்டிச் சென்றுள்ளது.
இது பணவீக்கம், கப்பல் போக்குவரத்துச் செலவு மற்றும் இறக்குமதிச் செலவுகளை மேலும் அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
எண்ணெய் விலை உயர்வு இலங்கையின் இறக்குமதிச் செலவை அதிகரித்து, வெளிநாட்டு கையிருப்புக்கு (Foreign Reserves) அழுத்தம் கொடுக்கும்.
இதனால், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடன் சுற்றுலாத்துறை, புலம்பெயர்ந்தோரின் பணப் பரிமாற்றம் மற்றும் ஏற்றுமதி மூலம் இலங்கை பெற்று வரும் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கப்படலாம்.
மேலும், நீண்ட காலத்திற்கு வட்டி விகிதங்கள் அதிகமாக இருந்தால், அது உள்நாட்டு முதலீடுகளையும் கடன் வளர்ச்சியையும் குறைத்து, கடந்த ஓராண்டாக ஏற்பட்டுள்ள பொருளாதார மீட்சி வேகத்தைக் கட்டுப்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.




