ஆபிரகாம் லிங்கன் கப்பலில் உணவு பற்றாக்குறை – தவிக்கும் மாலுமிகள்
யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் பணியாற்றும் மாலுமிகளின் மன உறுதி கடுமையாக குறைந்து வருவதாக குடும்ப உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த விமானம் தாங்கி கப்பலில் பணியாற்றும் மாலுமிகளும் கடற்படை வீரர்களும், ஒரு வேளை உணவிற்கு கூட சிரமப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை உணவிற்கு அரை கப் சாதமும் இரண்டு ரொட்டி துண்டுகளும் (tortillas) மட்டுமே பரிமாறப்படுவதாகவும், கப்பலின் கடையில் பெரும்பாலும் சோப்பு, டியோடரண்ட் மற்றும் பற்பசை போன்றவை பற்றாக்குறையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாலுமிகளின் மன உறுதி கடுமையாக குறைந்து வருவதாகவும், அவர்கள் விரைவில் துறைமுகத்தை அடைய வேண்டும் என்றும், இல்லையென்றால் மக்கள் மனநிலை பிறழத் தொடங்கிவிடுவார்கள் என்று கப்பலின் மருத்துவர் அல்லது சிகிச்சையாளர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MS NOW வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விமானம் தாங்கி கப்பலும் அதன் 5,000-க்கும் மேற்பட்ட பணியாளர்களும் ஜனவரி மாதம் முதல் மத்திய கிழக்கில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் டிரிபோலி கப்பல்களில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுவதை “போலிச் செய்தி” என்று கூறி மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




