ஈரானுக்கான தொடர் ஆதரவை உறுதிப்படுத்தியது சீனா!
சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் விரும்புவதாகவும், அமெரிக்காவுடன் நியாயமான உடன்படிக்கையை எட்டத் தயாராக இருப்பதாகவும் சீனாவிடம், ஈரான் தெரியப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இம்மாதம் சீனா செல்லவுள்ள நிலையிலேயே, ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi பீஜிங் பறந்து, முக்கிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.
மே 14 ஆம் திகதி சீனா செல்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். மே 15 ஆம் திகதி சீன ஜனாதிபதியை அவர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
குறிப்பாக டொனால்ட் ட்ரம்பின் சீன வருகைக்கு முன்னதாக, சீனாவுடனான தனது பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை ஈரான் வலுப்படுத்த முயற்சிப்பதை இச்சந்திப்பு வெளிப்படுத்துகின்றது.
அதேவேளை, போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகு, சீனாவால் வழிநடத்தப்படும் ஒரு புதிய மத்திய கிழக்கு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
சுயாதீனத்தன்மையை பாதுகாப்பதற்கு ஈரான் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு சீனா தனது தொடர் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது என தெரியவருகின்றது.




