ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பை பேணிய சியாத்தின் மரண விசாரணையில் திருப்புமுனை
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தொடர்பு கொண்டிருந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாத்தின் மரணத்தில் வன்முறைக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
69 வயதான சியாத் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவுகள் வந்துள்ளன.
இதற்கமைய அவருடைய மரணத்தில் எந்த வன்முறையும் கண்டறியப்படவில்லை என வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அந்தப் பரிசோதனையில் உடல்நலக் குறைவும், முன்னர் ஏற்பட்ட மாரடைப்பின் தடயங்களும் தெரியவந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எபஸ்டீனுடனான தொடர்பு
அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் சியாத்தின் பெயர் கிட்டத்தட்ட 2,000 முறை இடம்பெற்றிருந்தது.
பிரெஞ்சு புலனாய்வாளர்கள், ஒரு பரந்த மனிதக் கடத்தல் மற்றும் வரி மோசடி விசாரணையின் ஒரு பகுதியாக அவரைச் சிறப்பு கண்காணிப்பில் வைத்திருந்தனர்,
ஆனால் அவரைக் கைது செய்வதற்குப் போதுமான ஆதாரங்களைக் கண்டறியவில்லை. மே மாதத்தில், சியாத் பிரெஞ்சு ஒளிபரப்பு நிறுவனமான BFM-மிடம், எப்ஸ்டீனுடனான தனது உறவு முற்றிலும் தொழில்ரீதியானது என்று கூறியிருந்தார்.
அவரது வழக்கறிஞர், மென்யா அரப்-டிக்ரின் (Menya Arab-Tigrine), இந்த வாரம், சியாத்தின் கைதுக்கு நியாயம் கற்பிக்கும் எந்த ஆதாரத்தையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லை என்றும், அதாவது அவர் ஒரு குற்றத்தைச் செய்தார் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்களும் காவல்துறையினரும் முடிவு செய்யவில்லை என்று கூறியிருந்தார்.





