பாகிஸ்தான் சோதனைச் சாவடி மீது குண்டுத் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு
வடமேற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் இன்று நடத்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரெக்கை பாகிஸ்தானின் எல்லை சோதனைச் சாவடியில் மோதச் செய்து இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.
இதில் 12 இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்ளடங்களாக 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதலில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள டாங்க் மாவட்டத்தில், ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து கண்காணப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதி நீண்ட காலமாக இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது. சமீபத்திய மாதங்களில் வடமேற்கு பாகிஸ்தானில் தீவிரவாதம் கடுமையாக அதிகரித்துள்ளது.
தலிபான்கள், 2007-ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசை கவிழ்த்து, தங்களின் கடுமையான இஸ்லாமிய ஆட்சி முறையை அதன் இடத்தில் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




