சிறையில் இருந்து சபைக்கு வந்து அரசாங்கத்தை விளாசித்தள்ளிய நாமல்
சிறைச்சாலையிலிருந்து இன்று நாடாளுமன்றம் வந்து உரையாற்றிய நாமல் ராஜபக்ச எம்.பி., ஆளுங்கட்சிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் இன்று நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நாமல் ராஜபக்ச கூறியவை வருமாறு
“நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. எல் நினோ காலநிலைத் தாக்கத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களையும் உதவிகளையும் இந்த அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. ஆனால், அவை நிறைவேற்றப்பட்டனவா என்பது தெரியவில்லை.
அதேபோல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு நிதி உதவி வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது. அது வழங்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. எனவே, தயவுசெய்து நேபாளத்தை ஏமாற்றிவிட வேண்டாம். இது சர்வதேச மட்டத்தில் நமது நாட்டிற்கு நல்லதல்ல.
சுகாதாரத் துறையை மேம்படுத்துவோம் என ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்தது. ஆனால், இன்று வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான முறையான தலையீடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில், தற்போது வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறுகின்றனர். கிராமப்புற மக்கள் முழுமையாக அரசாங்க வைத்தியசாலைகளையே நம்பியுள்ளனர்.
எனவே, கொத்தமல்லி குடித்துவிட்டு வீட்டில் இருக்குமாறு கூறுவதற்கு ஜனாதிபதிக்கு எவ்வித உரிமையும் கிடையாது. டெங்கு நோயாளர்களும் கொத்தமல்லி குடித்துவிட்டுத் தூங்க முடியுமா?
கொத்தமல்லி குடிப்பதில் எமக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், நோயாளிகளுக்கு வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெறும் அடிப்படை உரிமை இருக்க வேண்டும்.
கதைகளைக் கூறி இந்நாட்டு மக்களை ஏமாற்றுவதை அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் கட்டிடங்களின் இரண்டாம் மாடிக்கு அடிக்கல் நாட்டுங்கள் அல்லது மலசலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டுங்கள்.
ஆனால், முதற்கட்டமாகக் கொத்தமல்லி விலையைக் குறைக்கவும், வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுங்கள்” என்று அவர் கூறினார்.




