ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்
மேற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு பறவைக்கு ‘H5 பறவைக் காய்ச்சல்’ (H5 bird flu) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட – பாதிப்பு இருக்கும் என சந்தேகிக்கப்படும் பறவைகளின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
மரணத்தை ஏற்படுத்தக்கூடிய இந்தத் தீவிர பறவைக் காய்ச்சல், மேற்கு ஆஸ்திரேலியாவில் இரண்டு கடல் பறவைகளிடமும் (Migratory seabirds), தெற்கு ஆஸ்திரேலியாவில் (South Australia) ஒரு பறவையிடமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்பெரன்ஸ் (Esperance) அருகே உள்ள ரோசஸ் கடற்கரையில் (Roses Beach) கண்டறியப்பட்ட இந்த புதிய பாதிப்பு, தற்போது உறுதிப்படுத்துதலுக்கான ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், டன்பரோ (Dunsborough) அருகே கண்டறியப்பட்டு புதன்கிழமை அறிவிக்கப்பட்ட மற்றொரு சந்தேகத்திற்குரிய பாதிப்பு தற்போது பரிசோதனையில் உள்ளது.
உள்ளூர் வனவிலங்குகளுக்கு இந்த நோய் பரவியதற்கான எந்தவொரு ஆதாரமும் இதுவரை இல்லை என்று மேற்கு ஆஸ்திரேலிய விவசாயத்துறை அமைச்சர் ஜாக்கி ஜார்விஸ் (Jackie Jarvis) தெரிவித்துள்ளார்.
பறவைக் காய்ச்சலைக் கண்டறிவதற்கு, பொதுமக்கள் அளிக்கும் இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகள் பற்றிய தகவல்களையே (Passive surveillance) அதிகாரிகள் பெருமளவில் நம்பியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் வேகமாக மாறிவரும் இந்தச் சூழ்நிலை குறித்து விவாதிக்க நேற்று ஒரு அவசரக் கூட்டம் நடைபெற்றது.





