அனில் ஜயந்த பெர்னாண்டோ – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இன்று (23) பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள், மக்களின் அடிப்படைத் தேவைகள், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் பிரதேசத்தின் நிலையான முன்னேற்றம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், காத்தான்குடி நகர சபையின் நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்கள் நகர அபிவிருத்தி மற்றும் பொதுமக்களின் தேவைகள் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைத்தார்.
இதன்போது, காத்தான்குடி மக்களின் நலனையும் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்கள் உறுதியளித்தார்.
இச்சந்திப்பு, காத்தான்குடி பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான திட்டங்களை துரிதப்படுத்துவதற்கும், மக்களின் நீண்டகால தேவைகளுக்கு தீர்வுகாணுவதற்குமான பயனுள்ள கலந்துரையாடலாக அமைந்தது.




