எட்னாவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்கர் பலி
சிசிலியில் உள்ள எட்னா மலையில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
29 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
எரிமலையின் மீது கடுமையான இடியுடன் கூடிய புயல் வீசியபோது அந்த நபர் மலையேற்றத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மின்னல் தாக்கியது தொடர்பான தகவல் கிடைத்ததும், அவர் உடனடியாக தீயணைப்பு வீரர்களின் ஹெலிகாப்டர் மூலம் கட்டானியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவரை காப்பாற்ற முடியாமல்போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எட்னாவில் எரிமலை செயற்பாடுகள் காரணமாக அப்பகுதி பொதுமக்களின் பார்வை அல்லது பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.




