செம்மணி விவகாரம் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமைய நடவடிக்கை: அரசு உறுதி
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அமையவே அரசாங்கம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது, செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதிக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு விஜயம் செய்வது குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் கூறியவை வருமாறு:
“செம்மணி விவகாரத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சு, துறைசார் நிபுணர்கள் மற்றும் குழுவினர் இது தொடர்பான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இது சார்ந்த தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஐரோப்பிய தூதுக்குழு அங்கு விஜயம் செய்வது குறித்து எனக்குச் சிறப்புத் தகவல் எதுவும் தெரியாது.
இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருவதால், நீதிமன்றம் வழங்கும் உத்தரவுகளுக்கு அமையவே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இடம்பெறும்.”என்றார் அமைச்சர்



