“அரசாங்க பயங்கரவாதம்” – NPPமீது விமல் கடும் விசனம்
நாட்டில் “அரசாங்க பயங்கரவாதத்தை” தோற்றுவிப்பதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முற்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:
“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தைத் திருத்துவதற்கான முன்மொழிவு என்பன நிறைவேற்றப்பட்டால், இந்நாட்டில் ஜனநாயகத்தின் மரண யாத்திரை ஆரம்பமாகும்.
அதேபோல, நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு இதன்மூலம் அரசாங்கம் முற்படக்கூடும்.
அவ்வாறு நடந்தால், தங்களால் குறிவைக்கப்படும் நபர்கள் மீது மாத்திரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்திச் சிறையிலடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
எனவே, அடுத்தகட்டமாகத் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், நாட்டில் உள்ள எதிரணிகளை இல்லாது செய்து, தன்னிச்சையாகச் செயற்படுவதற்கான சூழலை உருவாக்க அரசாங்கம் முற்படுகின்றது.
வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட மக்களை, அரசாங்க பயங்கரவாதத்திற்குக் கீழ்ப்படிய வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதாவது, தமது பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்கு விவசாயிகள் வீதிக்கு வந்தால் அவர்கள் சிறை செல்ல நேரிடலாம்.
தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கினால் அவர்கள் சிறையிலடைக்கப்படும் சூழ்நிலை உருவாக்கப்படலாம். மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டால் அவர்களும் ஒடுக்கப்படலாம்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் அனைத்துத் தரப்பினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று விமல் வீரவன்ச தெரிவித்தார்.




