சவுதிக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த களமிறங்குமா பாகிஸ்தான்?
சவூதி அரேபியாமீது ஏமனின் ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ‘மெக்கா ஒப்பந்தத்தின்’ கீழ் இராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இருப்பினும் உரிய நேரம் வரும்போது பாகிஸ்தான் செயல்படும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
துருக்கி, சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையே அண்மையில் கையெழுத்தான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் இஸ்லாமாபாத் எவ்வாறு தனது கடமைகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சஜ்ஜாத் ஹைதர் கான் இதனைத் தெரிவித்தார்.
“இப்போதைக்கு அதுபோன்ற விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை… நேரம் வரும்போது, ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்” என அவர் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இந்த முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதமேந்திய தாக்குதலானது, மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் இந்த வாரம் சவூதி நகரங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்தே இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு ஏமனின் ஹவுதி அமைப்பினரைக் கட்டுப்படுத்துமாறு ஈரானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ‘ரொய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் மத்தியஸ்தராகவும் செயல்பட்டு வரும் பாகிஸ்தான், சவூதி மீதான இந்தத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள போதிலும், கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் எவ்வாறு பதிலடி கொடுக்கப்படும் என்பது குறித்த மேலதிக விவரங்களை வெளியிடவில்லை.




