சர்வஜன வாக்கெடுப்பு: சட்டமா அதிபர் திணைக்களம் கூறியது என்ன?
22 சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது: சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படாது எனச் சட்டமா அதிபர் திணைக்களம் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சரும் சட்டத்தரணியுமான சுனில் வட்டகல இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் அரசாங்கம் என்ன செய்யும் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “22-ஆவது திருத்தச் சட்டமூலம் சர்வஜன வாக்கெடுப்புக்கு வழிவகுக்காது என்றே அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. சட்டமா அதிபர் திணைக்களமும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என்ற சட்ட விளக்கத்தையே எமக்கு வழங்கியுள்ளது.
இருப்பினும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்கு அமையவே அரசாங்கத்தின் இறுதி முடிவுகள் அமையும்” எனக் குறிப்பிட்டார்.




