மனித தலையீடுகள் இல்லாத தானியங்கி ஆயுதங்கள் குறித்து அவசர எச்சரிக்கை
எதிர்காலத்தில் மனிதத் தலையீடு இல்லாமல் மக்களைக் கொல்லக்கூடிய தானியங்கி ஆயுதங்கள் விரைவில் மோதல்களில் பயன்படுத்தப்படலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அவசரப் பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “இயந்திரங்கள் மூலம் மனிதர்களைத் தானாகவே குறிவைக்கும் ஒரு தார்மீக சிவப்புக் கோட்டை நாம் இப்போது ஆபத்தான முறையில் கடக்கும் தருவாயில் இருக்கிறோம், என குறிப்பிடப்பட்டுள்ளது.
“தெளிவான தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தானியங்கி ஆயுத அமைப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு, சட்டப்பூர்வமாகப் பிணைக்கும் ஒரு கருவியை அவசரமாக ஏற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இப்போதே தொடங்கப்பட வேண்டும்,” என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைன், சூடான், காசா, ஈரான் மற்றும் வளைகுடாப் பகுதிகளில் நடந்த மோதல்களில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் தானியங்கி ஆயுதங்களின் பங்கு குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2014 முதல் நடைபெற்று வரும் இந்த விவாதங்கள் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ளன, ஆனால் தொழில்நுட்பமும் முன்னேறியுள்ளமையால் காலத்திற்கு ஏற்ப புதுப்பிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.




