FIFA தலைவருக்கு நெருக்கடி: 3 கண்டங்களின் கூட்டமைப்புகள் போர்க்கொடி
FIFA தலைவர் Gianni Infantino எதிரான அழுத்தங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதனால் அவர் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.
கால்பந்து விளையாட்டு எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானதல்ல எனத் தெரிவித்து, ஐரோப்பா (UEFA), வட மற்றும் மத்திய அமெரிக்கா (CONCACAF), ஆசியா (AFC) ஆகிய மூன்று கண்டங்களின் கூட்டமைப்புகள் இணைந்து காரசாரமான அறிக்கையை வெளியிட்டுள்ளன.
FIFA வின் உலகக்கோப்பை உள்ளிட்ட முக்கியப் போட்டிகளில் தனியார் முதலீடுகளைக் கொண்டுவருவதற்கான திட்டத்தை இன்பாண்டினோ முன்மொழிந்து, பின்னர் சில நாட்களிலேயே அதைத் திரும்பப் பெற்றதில் இருந்தே அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
சனிக்கிழமையன்று இதற்குப் பதிலளித்த FIFA நிர்வாகம், FIFAவையும் அதன் தலைவர் இன்பாண்டினோவையும் பலவீனப்படுத்த சிலர் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் எனக் குற்றம்சாட்டியிருந்தது.
இருப்பினும், திங்கள்கிழமை மூன்று முக்கியக் கண்டங்களின் கூட்டமைப்புகள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் , இன்பாண்டினோவிற்கு எதிரான எதிர்ப்புகள் இன்னும் தணியவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு ,
“கால்பந்து விளையாட்டின் தலைமைப் பதவி என்பது ஒருவருக்குச் சொந்தமான உடமை அல்ல. அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பதிலோ அல்லது அதிகாரத்தைக் கோருவதிலோ தலைமைத்துவம் இல்லை.
ஏமாற்று வேலைகளால் நம்பிக்கை உடைக்கப்படும்போது, அதிகாரத்தை வழங்கிய அமைப்பிற்கும் மேலாக ஒரு தனிநபர் தன்னை நினைத்துக்கொள்ளும்போது, அவர் தனது கடமையிலிருந்து தவறிவிட்டார் என்றுதான் அர்த்தம்.
மேலும், தனியார் முதலீட்டுப் பங்கு விற்பனை முன்மொழிவு குறித்து முழுமையான, சுதந்திரமான மறுஆய்வு நடத்தப்பட வேண்டும்.” என்றும் மூன்று கூட்டமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
பதவி விலகக் கோரிக்கை
இன்பாண்டினோவிற்குப் பதிலாக FIFA தலைவராகும் வாய்ப்புள்ளவராகக் கருதப்படும் நார்வே காற்பந்துச் சங்கத்தின் (NFF) தலைவரான லிஸ் கிளாவெனெஸ் (Lise Klaveness), 56 வயதான இன்பாண்டினோ உடனடியாகத் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வெள்ளிக்கிழமை வலியுறுத்தியிருந்தார்.




