இலங்கை, இந்தியாவுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது” என்று அமைச்சரவை பதில் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (செப்டம்பர் 09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு ,
“இந்திய அரசியலில் நீண்ட அனுபவமிக்க மூத்த அரசியல்வாதியான ராஜ்நாத் சிங்கின் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டது.
அவரது பயணத்திட்டத்தின்படி, செப்டம்பர் 09 (இன்று) காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். அதனைத் தொடர்ந்து, இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்து அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதுடன், மாலையில் பிரதமரையும் சந்தித்துப் பேசுவார்.
மேற்படி நிகழ்வுகளுக்குப் பிறகு கங்காராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபடும் அவர், நாளை (செப்டம்பர் 10) நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கும் விஜயம் செய்யவுள்ளார்.
கையெழுத்தாகவுள்ள 3 ஒப்பந்தங்கள்
ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது பின்வரும் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன.
1. இலங்கை மற்றும் இந்திய தேசிய மாணவர் படையணிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பயிற்சிகளை மையப்படுத்திய முதல் ஒப்பந்தம்.
2. இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும், இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரிக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இரண்டாவது ஒப்பந்தம்.
2000 – 2006 காலப்பகுதியில் இலங்கைக்கு இந்தியா நன்கொடையாக வழங்கிய 24 வான் பாதுகாப்பு ஆயுதங்களில், 18 ஆயுதங்கள் ஏற்கனவே இந்தியாவால் இலவசமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. எஞ்சியுள்ள 6 ஆயுதங்களையும் இந்திய அரசாங்கத்தின் செலவிலேயே பராமரிப்பது தொடர்பானதே மூன்றாவது ஒப்பந்தம்.
இலங்கையின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகப் பரப்பப்படும் தகவல்கள் உண்மையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவை மேலும் பலப்படுத்துவதே இந்த விஜயத்தின் முதன்மை நோக்கமாகும்” என்று அமைச்சர் விஜித ஹேரத் தெளிவுபடுத்தினார்.




