பாலஸ்தீன ஆக்சன் அமைப்பு தடை: மேல்முறையீடு செய்ய பிரித்தானிய உச்ச நீதிமன்றம் அனுமதி
பாலஸ்தீன ஆக்சன் (Palestine Action) அமைப்புமீதான தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அதன் இணை நிறுவனரான ஹுதா அம்மோரிக்கு (Huda Ammori) பிரித்தானியா உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நேரடிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இந்த அமைப்பு கடந்த ஆண்டு ஜூலை மாதம் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த தடையை நீக்கக் கோரி அமைப்பின் இணை நிறுவனரான ஹுதா அம்மோரி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
கடந்த பெப்ரவரி மாதம், இந்தத் தடை அளவுக்கு மீறியது மற்றும் சட்டவிரோதமானது என மேல் நீதிமன்றம் (High Court) தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அந்தத் தீர்ப்பைக் கடந்த மாதம் மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) ரத்து செய்தது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அம்மோரிக்கு அனுமதி வழங்கியுள்ளதுடன், இந்த வழக்கு நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளது.




