நைஜீரியாவில் பரீட்சை எழுதிய மாணவர்கள் துப்பாக்கி முனையில் கடத்தல்
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள மேல்நிலை பாடசாலையொன்றில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த மாணவர்களை கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
இராணுவத்தினர் குறித்த குழுவினரை பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இராணுவ வீரர் ஒருவரும், துணை ராணுவ ஆதரவுப் படையைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து 10 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை இராணுவ வீரர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
அதேநேரம் இன்னும் சில மாணவர்கள் காணாமல்போயுள்ளதாகவும், எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பதைக் கண்டறிய அதிகாரிகள் முயன்று வருவதாகவும் போர்னோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களை மீட்கும் முயற்சியில், இராணுவம், காவல்துறை மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




