இந்தியாவில் மீண்டும் மாணவர்கள் போராட்டம்
ஜார்க்கண்ட் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (JPSC) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (JSSC) மூலம் நடத்தப்பட்ட அரசுப் பணித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
‘ஜார்க்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திகாரி மோர்ச்சா’ (JLKM) கட்சியின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ தலைமையில் மாணவர்கள் இன்று ராஞ்சியில் உள்ள சட்டப்பேரவையை நோக்கி முற்றுகைப் பேரணி நடத்தினர்.
9 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு, தேவேந்திர நாத் மஹ்தோ ஸ்ட்ரெச்சரில் இருந்தவாறே இப்பேரணியில் கலந்துகொண்டார்.
பழைய சட்டப்பேரவை கட்டிடத்திலிருந்து தொடங்கிய பேரணி, புதிய சட்டப்பேரவை வளாகத்தை நெருங்கியபோது அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு செல்ல முயன்றது.
போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் பலமுறை தண்ணீர் பீய்ச்சி அடித்தும், 6 முறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் பதற்றம் நிலவியது.
போராட்ட பின்னணி
கடந்த சில மாதங்களாகவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (ஜேபிஎஸ்சி) மற்றும் ஊழியர் தேர்வு வாரியம் (ஜேஎஸ்எஸ்சி) மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி மாணவர்கள் போராடி வருகின்றனர்.
அரசு தரப்பில் இதுவரை ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், மாணவர்களின் முக்கியக் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனால், மாநிலம் தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.




