உக்ரைன் போரில் உதவி: வடகொரியாவுக்கு ரஷ்ய ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுயை (Choe Son Hui) ஞாயிற்றுக்கிழமை கிரெம்ளினில் (Kremlin) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது, ரஷ்யா மேற்கொள்ளும் ‘சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு’ வடகொரியா அளித்து வரும் உதவிகளுக்காக அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாகக் கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது.
கடந்த 2024-ஆம் ஆண்டில், ரஷ்யாவின் மேற்குப் பகுதியான குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்திற்குள் உக்ரைன் நடத்திய மிகப்பெரிய ஊடுருவலை முறியடிக்க வடகொரியப் படைகள் ரஷ்யாவிற்கு உதவின.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் (Mutual defence pact), குர்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகளுடன் இணைந்து போராட வடகொரியா சுமார் 14,000 வீரர்களை அனுப்பியிருந்தது.
முன்னதாக, ஆகஸ்ட் 2024-இல் எல்லையைத் தாண்டிப் பிரம்மாண்ட தாக்குதல் நடத்திய உக்ரைனியப் படைகள், பல மாதங்களாக ரஷ்யாவின் கணிசமான நிலப்பரப்பைக் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.
இந்தச் சந்திப்பின் போது, ரஷ்யக் கூட்டமைப்புடனான உறவை அனைத்துத் துறைகளிலும் விரிவாக மேம்படுத்துவதில் வடகொரியா உறுதியுடன் இருப்பதை அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியதாக அமைச்சர் சோ சன் ஹுய் தெரிவித்ததாகக் கிரெம்ளின் கூறியுள்ளது.





