ரஷ்ய தலைநகரை குறிவைத்து 620 இற்கு மேற்பட்ட ட்ரோன் தாக்குதல்கள்
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவைக் குறிவைத்து இரவு நேரத்தில் 620-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் (Drones) மூலம் உக்ரைன் நடத்திய தாக்குதலானது, கடந்த பல ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி வரை மாஸ்கோ பிராந்தியத்திற்கு மேலே 180 ட்ரோன்களை , ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின் (Sergei Sobyanin) தெரிவித்தார்.
பின்னர், தலைநகரை நோக்கி வந்த மேலும் 17 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல் இதுவென ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான ‘டாஸ்’ (TASS) விவரித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதலில் 10 வயது சிறுமி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்திய ஆளுநர் ஆண்ட்ரி வோரோபியோவ் (Andrey Vorobyov) தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இரவு நேரத்தில் எதிரிகளால் ஏவப்பட்ட 147 ட்ரோன்களில் 111 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக அல்லது செயலிழக்கச் செய்ததாக உக்ரைன் வான்படை அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பின்படி, ஜூலை மாதத்தில் மட்டும் உக்ரைனில் 437 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது மே 2022-க்குப் பிறகு பதிவான மிக அதிகபட்ச மாதாந்திர உயிரிழப்பாகும்.
அதேபோல், ஜூலை மாதத்தில் உக்ரைனின் தாக்குதல்களால் 79 ரஷ்ய பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.




