குழந்தை துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரிப்பு – பிரான்ஸின் முன்னாள் மேயர் வாக்குமூலம்
பிரெஞ்சுத் தலைநகரில் உள்ள அரசு மழலையர் பாடசாலைகள் மற்றும் தொடக்கப் பாடசாலைகளில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த குழந்தைத் துஷ்பிரயோகச் சம்பவங்களுக்கு நிறுவனங்களின் “கூட்டுத் தோல்வியே” காரணம் என்று பாரிஸ் நகரின் முன்னாள் மேயர் ஆன் இடால்கோ (Anne Hidalgo) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செனட் விசாரணையில் பதிலளித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர் மதிய உணவு இடைவேளைகள், ஓய்வு நேரங்கள் மற்றும் பள்ளி முடிந்த பிறகான செயல்பாடுகளின் போது சிறு குழந்தைகள் மீதான தவறான நடத்தை, வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 200-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பொலிஸார் விசாரணை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், குடும்பங்கள் உணரும் கைவிடப்பட்ட மனநிலையைத் தான் புரிந்துகொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை துஷ்பிரயோகம் குறித்த தங்கள் கவலைகளை நகர நிர்வாகத்திடம் (City Hall) பல ஆண்டுகளாகத் தெரிவித்தாலும், அவை செவிமடுக்கப்படவில்லை என்று பெற்றோர்களின் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
துஷ்பிரயோக அபாயத்தில் இருந்த ஒருவருக்கு உதவத் தவறியதாகக் கூறப்படும் விவகாரத்தில், இடால்கோ மற்றும் தற்போதைய மேயர் இம்மானுவேல் கிரிகோயர் (Emmanuel Gregoire) ஆகியோர் மீது விசாரணை தொடங்கியுள்ளதாக பாரிஸ் பொது அரசு வழக்கறிஞர் லார் பெக்கு (Laure Beccuau) தெரிவித்துள்ளார்.




