மோதல் வெடிப்பதற்குள் முடிவு கட்டுங்கள்: யாழ்.மீனவர்களிடமிருந்து முதல்வர் விஜய்க்கு பறந்த செய்தி
எல்லை தாண்டி நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்களின் செயற்பாடுகளைத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்தச் சங்கத்தின் பிரதிநிதி செபமாலை அன்ரனி செபராசா மேலும் குறிப்பிடுகையில்,
“சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக் கடற்பகுதிக்குள், குறிப்பாகப் புங்குடுதீவு கடற்பகுதிக்குள் அடாவடியாக நுழைந்த தமிழக மீனவர்கள், எமது தொழிலாளர்களின் கோடிக்கணமான பெறுமதியான வலைகள் மற்றும் உடமைகளைச் சீரழித்துவிட்டுச் சென்றுள்ளனர்.
புங்குடுதீவுக் கரை வரை வந்து தமிழக மீனவர்கள் இந்த அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ள போதிலும், இலங்கைக் கடற்படையினரும் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளனர்.
இதேவேளை, கடற்றொழில் அமைச்சரும் மீனவர் விவகாரத்தில் ஒரு நழுவல் போக்குடனே செயற்படுகின்றார்.
இலங்கைக் கடற்படையைக் கொண்டு இந்தியச் சட்டவிரோத மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றே நாம் அநுர அரசிடம் கோருகின்றோம்.
ஆனால், கடற்றொழில் அமைச்சர் இங்கொன்றும் அங்கொன்றும் பேசித் திரிகின்றாரே தவிர, உருப்படியான எதையும் இதுவரை செய்யவில்லை. தேர்தல் காலத்தில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமைச்சரும் அவர்சார் தரப்பினரும் மறந்துவிட்டனர் என்றே தோன்றுகின்றது.
அப்பாவிக் கடற்றொழிலாளர்களாகிய நாம் தொடர்ச்சியாக ஏமாற்றத்துடன் எமது வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றோம். இதன் காரணமாக, எதிர்வரும் நாள்களில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே முரண்பாடுகள் முற்றிப் பெரியதொரு வன்முறையாக மாறுவதற்கான ஆபத்தான சூழல் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
எனவே, அவ்வாறானதொரு அச்சுறுத்தும் நிலை தோன்றுவதற்கு முன்னர், எல்லை தாண்டிவரும் தமிழக மீனவர்களின் அத்துமீறல்களைத் தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்.” – என்றார்.





