அதிகாரத்துக்காக எதையும் செய்யும் ராஜபக்சக்கள்
“அதிகாரத்துக்காக ராஜபக்சக்கள் எதையும் செய்வார்கள். தமது திட்டங்களுக்குத் துணைநிற்கும் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளையும் அவர்கள் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். சுரேஷ் சலே விடயத்திலும் இதுதான் நடக்கின்றது.”
-இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“குற்றம் இழைத்தவர்கள் தாமாக முன்வந்து உண்மைகளை வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே, அவர்களிடமிருந்து தகவல்களைச் சட்டப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இது விசாரணை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும்.
உலகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் நபர் சுரேஷ் சலேயா? தமது மனைவி மற்றும் பிள்ளைகள் மீது சுரேஷ் சலேவுக்கு அக்கறை இருந்தால் அவர் உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும். தனது பிள்ளைகள் மற்றும் மனைவி தொடர்பான தகவல்களைச் சுரேஷ் சலே மறைக்க வேண்டியதில்லை.
சலே ஜனாதிபதி ஆகுவதற்காக அல்ல, வேறு ஒரு தரப்பிற்காகவே இது (உயிர்த்த ஞாயிறு தாக்குதல்) செய்யப்பட்டிருக்கும்.
ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்பு இடம்பெற்றது. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய கருத்தை ஏப்ரல் 23 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டார்.” – என்றார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க.





