அமைதி பேச்சு வெற்றியை நோக்கி: கத்தார் தகவல்
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் மத்தியஸ்தர்கள் முன்னேற்றம் கண்டு வருவதாக கத்தார் செவ்வாய்க்கிழமை (04) தெரிவித்துள்ளது.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறிய குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது.
கத்தாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent crude) விலை 2 சதவீதத்திற்கும் அதிகமாகக் சரிந்தது.
முற்றுகையிடப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியிலான கடல்சார் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம் என்ற நம்பிக்கையே இதற்கு முக்கிய காரணமாகும்.
இருப்பினும், இந்நீரிணை பகுதியைக் கடக்க முயன்ற மற்றொரு சரக்குக் கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகியதால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் மாஜித் அல்-அன்சாரி கருத்து தெரிவிக்கையில், இராஜதந்திர தொடர்புகள் “மிகவும் முன்னேற்றமடைந்த நிலையை” எட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கத்தார், பாகிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய மத்தியஸ்த நாடுகள் வாஷிங்டன் மற்றும் தஹ்ரானுக்கு இடையே வரைவு யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கு நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.




