நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க அழுத்தம்? பென்டகன் மின்னஞ்சல் சர்ச்சை
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகனிலிருந்து வெளியானதாகக் கூறப்படும் ஒரு உள் மின்னஞ்சல், தனது நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நட்பு நாடுகளை எதிர்கொள்ள கடுமையான நடவடிக்கைகள் பரிந்துரைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு வெளியான அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மின்னஞ்சலில், தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஃபாக்லாண்ட்ஸ் தீவுகள் மீதான பிரித்தானியாவின் உரிமையைப் பற்றிய அமெரிக்காவின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டதாக கூறப்படுகிறது. இத்தீவுகள் மீது அர்ஜென்டினாவும் உரிமைக் கோரிக்கை வைத்துள்ளது.
இதனிடையே, நேட்டோ அமைப்பில் இருந்து உறுப்பினர்களை இடைநிறுத்துவது அல்லது நீக்குவது தொடர்பான எந்த விதியும் இல்லை என ஒரு நேட்டோ அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் இந்த அறிக்கையை நிராகரித்து, அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுகிறோம் என்று கூறினார். மேலும், சர்வதேச சட்டத்தின் வரம்புக்குள் மட்டுமே நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை ஸ்பெயின் தொடரும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, ஈரானை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பிறகு, முக்கியமான ஹார்முஸ் நீரிணை வழித்தடத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், அமெரிக்க நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவு அளிக்காத நேட்டோ நாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்காவுக்கு தன் இராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி அளித்தாலும், மேலும் தீவிரமாக போரில் ஈடுபடுவது தனது நலனுக்கு சாதகமல்ல என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பென்டகன் மற்றும் பிரித்தானிய அரசு இதுவரை அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.





