கணித கங்காரு போட்டி – ஜெர்மனியில் வசிக்கும் சிரிய மாணவர் சாதனை
உலகின் மிகப்பெரிய கணிதப் போட்டிகளில் ஒன்றான ‘கணித கங்காரு’ ( Mathematical Kangaroo) போட்டியில் ஜெர்மனியில் வசிக்கும் 16 வயதுடைய சிரிய மாணவரான பிலால் கிரெய்டி (Bilal Kreidi), தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் நாடு முழுவதும் உள்ள 12,600-க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இருந்து 881,000-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்த சாதனையைத் தொடர்ந்து பிலால் கல்வி சார்ந்த டிக்டொக் சேனல் ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
இதில், ஐந்தாம் வகுப்பு முதல் மேல்நிலைப் பாடசாலை வரை ஐந்து நிலைகளில் உள்ள எளிமைப்படுத்தப்பட்ட கணிதப் பாடங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.
அவரின் இந்த முயற்சி கணித பாடத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிலால், “மாணவர்கள் கணிதத்தைப் புரிந்துகொள்ளவும், அவர்களின் திறன்களை வளர்க்கவும் உதவுவதே எனது முதன்மை நோக்கம்,” என்றும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த வலுவான வரவேற்பு, தொடர்ந்து செயல்பட தன்னைத் தூண்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை கணித கங்காரு’ போட்டி ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்டு, சுமார் அறுபது லட்சம் பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது.
இளம் மாணவர்களிடையே கணிதத்தின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, தர்க்கரீதியான சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.





