பொலிஸ்மா அதிபருக்கு எச்சரிக்கை விடுத்த மஹிந்த அணி: விசாரணை வேட்டை ஆரம்பம்
பொலிஸ்மா அதிபருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (மொட்டு கட்சி) பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த சாகர காரியவசம்,
“அரசாங்கத்திற்குச் சேவை செய்வதை விடுத்து, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சேவையாற்றுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபர், நடுவீதியில் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார் என வரலாற்றில் பதிவாவதை நாம் விரும்பவில்லை,” எனத் தெரிவித்திருந்தார்.
சாகர காரியவசத்தின் இந்தக் கருத்துக்கே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடும் கண்டனம் தெரிவித்து பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:
“அதிகாரத்திற்காக நாட்டு மக்களைப் பலியெடுத்த கொலைகார அரசியல் முகாமிலேயே சாகர காரியவசம் அங்கம் வகிக்கின்றார். அதிகாரத்திற்காகத் தாம் எதையும் செய்வோம் என்பதையே அவரது இக்கருத்து வெளிப்படுத்துகின்றது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் தனது கடமையைச் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றார். ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிரான விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதனாலேயே ஊழல்வாதிகள் பீதியடைந்து, இவ்வாறான அச்சமூட்டும் கருத்துகளை வெளியிடத் தொடங்கியுள்ளனர்.
சாகர காரியவசத்தின் இந்தக் கூற்றுத் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்படும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.




