வைபவ் சூரியவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்?
இந்திய அணியில் இடம்பெறுவதற்காக 15 வயதான இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூரியவன்ஷி (Vaibhav Sooryavanshi) தனது வாய்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 3-0 எனக் கைப்பற்றி முழுமையாகத் தொடரைக் கைப்பற்றியது. இத்தொடரில் சூரியவன்ஷிக்கு விளையாடும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இத்தொடரில் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
டெல்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அபிஷேக் சர்மா சர்வதேச T20 போட்டிகளில் மூன்றாவது அதிவேக சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நடப்பு ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரான சூரியவன்ஷி, கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சர்வதேச T20 போட்டியில் அறிமுகமானார். எனினும், அந்தத் தொடரில் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.
தொடர்ந்து, அதே மாதத்தின் பிற்பகுதியில் ஹராரேவில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் இரண்டு அரைசதங்களை விளாசிய போதிலும், அதன்பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
போட்டிக்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் பேசிய கௌதம் கம்பீர், “உங்களுக்கு 15 வயதாக இருந்தாலும் சரி அல்லது 30 வயதாக இருந்தாலும் சரி, உங்கள் வாய்ப்பு வரும் வரை நீங்கள் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அவரிடம் உள்ள திறமை என்ன, அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வருபவர், இப்போதுதான் அணிக்குள் நுழைந்த ஒருவரை விட எப்போதுமே முன்னுரிமை பெறுவார்” என்று கூறினார்.




